மக்கள் போற்றும் வகையில் காவல் துறையினரின் பணி இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டிஜிபி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அங்கு 'உங்கள் துறையில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றதுடன் சுற்றுசூழல் நலனை முன்னிறுத்தும் விதமாக மரக்கன்றை நட்டு வைத்தார். இதனையடுத்து டிஜிபி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை எழுதினார்.
அதில், தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்தது, தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவல்துறை உங்கள் நண்பன் என்ற காவல்துறை வாசகமே சமூக நீதி, சமத்துவம், மனித கொள்கைகளைக் கடைப்பிடிப்பதை பறைசாற்றுகிறது என்றும் காவல்துறை அதன்படி செயல்படுவதை நான் பாராட்டுகிறேன். மக்கள் போற்றும் வகையில் பணியாற்றி வரும் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்கு துணை நிற்கும் காவலர்கள் மற்றும் அலுவலர்கள் என அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டு ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.