தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை விமர்சனம்


சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: மதுரையில் வயது முதிர்ந்த பெண்களை கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வயதான தாய்மார்கள் 3 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், ஜூலை 12-ம் தேதி 70 வயது மூதாட்டியான முத்துலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து இது பலத்த கேள்விகளை எழுப்புகிறது.

கொலை, கொள்ளை என்றுசெய்தி வராத நாளே இல்லைஎன்ற அளவுக்கு, தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளை பழிவாங்க மட்டுமே காவல் துறையினரை பயன்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழக காவல் துறையை இரையாக்கும் போக்கை திமுக இனியாவது கைவிட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை உணர்ந்து, உடனடியாக சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது

x