அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸார் திடீர் சாலை மறியல்!


கும்பகோணம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமை வகித்தார்.

இப்போராட்டத்தில் மாநகரத் தலைவர் மிர்சாவூதீன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் தியாகராஜன், மாமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையை அவதூறாகப் பேசி, விமர்சித்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

தொடர்ந்து அண்ணாமலையின் உருவப்படத்தை எரிக்க முயன்றபோது போலீஸார் அவரது உருவப்படத்தை பறித்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸார், போலீஸாரையும், அண்ணாமலையையும் கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீஸாரின் சமாதானத்தை ஏற்று காங்கிரஸார் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

x