ஈரோடு: பைப் கடையில் தீ விபத்து; ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்


ஈரோடு: பைப் கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

ஈரோடு -சத்தியமங்கலம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பைப் மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே கிடங்கும் அமைந்துள்ளது. இன்று காலை 10 மணியளவில் பைப் கடையில் திடீரென தீப்பற்றி கரும்புகை வெளியேறியது.

இதுகுறித்து உடனடியாக ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடங்கியது. பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் எரிந்ததால் தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயைக் கட்டுப்படுத்த பவானி மற்றும் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து மேலும் இரு தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

இந்த தீவிபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும், ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பைப் மற்றும் கட்டுமானப் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

x