கடலூர் அருகே தீப்பிடித்து எரிந்த கூரை வீடுகள்; ரூ.2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்


தீ விபத்து

கடலூர்: புவனகிரி அருகே இரண்டு கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆயிப்பேட்டை மெயின் ரோட்டில் ஆனந்தாயி, ஞானசேகர் என்ற கூலி தொழிலாளர்கள், சாலையோரமாக கூரைவீடுகளைக் கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் ஆனந்தாயி வீடு நேற்று நள்ளிரவு எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

காற்று பலமாக அடித்ததால், அருகில் இருந்த ஞானசேகர் வீட்டின் மீதும் தீ பரவி அந்த வீடும் முழுவதுமாக எரிந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி தப்பித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இரண்டு கூரை வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு இழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x