20 அம்ச கோரிக்கைகள்: கோவையில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்


கோவை: காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான மின் வாரிய ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), சார்பில் மாநிலம் முழுவதும் இன்று மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவையில் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், மின் வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரியத்தை தனியார்மயம் ஆக்கக் கூடாது.

ஓய்வு பெறுவோருக்கு பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். 2019-ல் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும், 2023-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் பேசினர். இப்போராட்டத்தில் அமைப்பின் நிர்வாகிகள் மதுசூதனன், கோபாலகிருஷ்ணன், மணிகண்டன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

x