ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: குடும்பத்தினருக்கு ஆறுதல்!


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது இல்லத்துக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை, பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸில் 8 சரணடைந்துள்ளனர். அவர்கள் தவிர மேலும் 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அன்றைய தினம் திமுக சார்பில் மூத்த அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் சென்னை, அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு இன்று காலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

x