சாலைகளில் ஓட தகுதியற்ற 10 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கம்: சிஐடியு பகிரங்க குற்றச்சாட்டு


கோப்புப் படம்

விருதுநகர்: சாலைகளில் ஓட தகுதியற்ற 10 ஆயிரம்பேருந்துகள் இயக்கப்படுவதாக சிஐடியு குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம்- சிஐடியு மாநில அளவிலான நிர்வாகக்குழுக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மாநிலதுணைத் தலைவர் அன்பழகன், மண்டலபொதுச் செயலாளர் வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட் டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராஜன் தெரிவித்ததாவது: போக்குவரத்துக் கழகங்களில் அவுட்சோர்ஸ் முறையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவது கைவிடப்பட வேண்டும்.

மினி பேருந்துகள் இயக்குவதைதனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டுஅரசே மினி பேருந்துகளை இயக்கவேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களில், சாலையில் ஓடத் தகுதியற்ற 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மின்சார பேருந்துகள் இயக்குவதையும் அரசே செயல்படுத்த வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 19 மாதங்களாக ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வூதியர்களுக்கு கடந்த எட்டரை ஆண்டுகளாக பஞ்சப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை. இவ்வாறு ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் தொழிலாளர் பணத்தை எடுத்து அரசு செலவிட்டுள்ளது.

நஷ்டம் வரும் என்று தெரிந்தே 10ஆயிரம் வழித்தடங்களில் மக்களுக்காகஅரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின் றன. எனவே, போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடையேயான தொகையை அரசு வழங்க வேண்டும். அதை பட்ஜெட்டில் ஒதுக் கீடு செய்ய வேண்டும்.

எங்களது கோரிக்கைகளை ஊராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்,நகராட்சித் தலைவர் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் முறையிட்டுவலியுறுத்துவோம். அவை மறுக்கப்பட்டால் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை முன்னெடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x