விவசாயிகள், மண்பாண்டம் செய்வோர் கட்டணமின்றி வண்டல், களிமண் எடுக்க அனுமதி: முதல்வர் தொடங்கி வைத்தார்


சென்னை: தமிழகத்தில் ஏரி, குளம், கண்மாய்களில் கட்டணமின்றி களிமண்மற்றும் வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நேற்று வழங்கினார்.

நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண்ணை விவசாயிகளும் மண்பாண்டம் செய்வோரும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என அரசு அறிவித்திருந்தது.

இதனை தொடங்கி வைக்கும்நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் பயனாளிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுமதி ஆணைகளை வழங்கினார். அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இயற்கை வளங்கள் துறை செயலாளர் க.பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் எ.சரவணவேல்ராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் எம்எல்ஏ, ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், காஞ்சி ஆட்சியர் கலைச்செல்வி, கடலூரிலிருந்து ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், மேயர் ஆர்.சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், திருவாரூரில் இருந்து எம்.பி. வை.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் தி.சாரு, கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டனர்.

கட்டணமின்றி மண் எடுத்துச் செல்வதன் மூலம் ஏரி, குளம்மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரைச் சேமிக்கஉதவும் என்று கடந்த ஜூன் 12-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்திட்டத்தினை எளிமையாக செயல்படுத்திட இயற்கை வளங்கள் துறைஅரசாணை திருத்தம் செய்யப்பட்டுஇணையதளம் (tnesevai.tn.gov.in)மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாவட்டஆட்சியர்களுக்கு பதிலாக வட்டாட்சியர்களால் அனுமதிவழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த வட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண்ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். நீர்வளத்துறை மற்றும் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற் பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர், உதவிஇயக்குநர், வட்டாட்சியர்கள், கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் ஏரி, குளம் மற்றும் கண்மாய்பொறுப்பாளர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கி, இத்திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார். விவசாயிகள் மற்றும்மண்பாண்ட தொழில் செய்வோர்tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இதனை தமிழகஅரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

x