இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது


தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 7 இலங்கை மீனவர்களை கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இன்று (மே 19) தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

தூத்துக்குடி கடலோரக் காவல் படையினர் `வைபவ்' ரோந்துக் கப்பலில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கன்னியாகுமரியில் இருந்து தென் கிழக்கே 74.8 கடல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வேறு நாட்டைச் சேர்ந்த படகு ஒன்று நிற்பதை அவர்கள் கண்டனர்.உடனடியாக அங்கு விரைந்து சென்று, அந்தப் படகை சுற்றி வளைத்தனர். அது இலங்கையைச் சேர்ந்து மீன்பிடிப் படகு என்பது தெரியவந்தது.

`திர்ட்டி மகா - 6' என்ற அந்த மீன்பிடிப் படகில், இலங்கை மீனவர்கள் 7 பேர் இருந்தனர். அவர்களைக் கைது செய்த கடலோரக் காவல் படையினர், படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை இன்று தூத்துக்குடிக்கு அழைத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களிடம், மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த உள்ளனர் அதற்குப் பின்னர், கைது செய்யப்பட்டுள்ள இலங்கைமீனவர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x