திருவாரூரில் சோகம் : சாலையோர மரத்தில் வாகனம் மோதி 2 இளைஞர்கள் பலி!


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பச்ச குளம் கிராமத்தில் இருசக்கர வாகனம் சென்றுக் கொண்டிருந்த இளைஞர்கள் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கருணாவூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மனோஜ் (19), மணிகண்டன் என்பவரின் மகன் பிரசாந்த் (19) இருவரும் இன்று இரவு பச்ச குளம் கிராமத்தில் நடைபெற உள்ள கோயில் திருவிழாவை காண்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வாகனத்தை மனோஜ் ஓட்டி சென்றுள்ளார். இவர்களது இருசக்கர வாகனம் பச்சகுளம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பிரசாந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மனோஜ் காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தேவங்குடி போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

x