மதமோதலை உருவாக்கப் பார்க்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்: போலீஸில் பரபரப்பு புகார்!


ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை அகற்றுவது குறித்து மதமோதலை உருவாக்கும் வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் இன்று புகார் ஒன்றை அளித்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 1-ம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலைப் பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய கனல்கண்ணன் ஸ்ரீரங்க கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.

ஏற்கெனவே 2006-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அச்சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகளான நிலையில் தற்போது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல்கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது. அதே போல் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தைத் தூண்டும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால் அவர் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.

x