இந்தி பேசாத தேர்வர்களுக்கு சிரமம்; தேர்வு முறையை மாற்ற நடவடிக்கை அவசியம்: சு.வெங்கடேசன் வலியுறுத்தல்


மதுரை: இந்தி பேசாத மாநிலத் தேர்வர்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலான தேர்வு முறையை மாற்றக் கோரி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ 8.3.2024-ல் வெளியிட்ட அறிவிக்கையின்படி, ஏ, பி, சி பிரிவில் உள்ள 118 காலி பணியிடங்களுக்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதில் இந்தி மொழி தேர்வும் இடம்பெற்றுள்ளது. அதனால் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல்கட்ட தேர்விலேயே வாய்ப்பை இழந்து, இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறிகொடுப்பர்.

பிரிவு ஏ-உதவி செயலர் (நிர்வாகம்) பதவிகளுக்கான முதல்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300-ல்இந்தி மொழித் தேர்வுக்கு 30 மதிப்பெண்கள், பிரிவு பி-இளநிலைப் பொறியாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மொழித் தேர்வுக்கு 15 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரிவு பி-இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மற்றும் ஆங்கில மொழித் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள். பிரிவு சி- கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மற்றும் ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். பிரிவு சி- இளநிலை கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240-ல் இந்தி/ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது நாட்டின் மொழிப் பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது. எனவே, இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு ஏற்றவாறு தேர்வு முறையை மாற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

x