ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் நல்லடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் நல்லடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக இதுவரை 11 பேரை கைது செய்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யவும், அங்கு நினைவிடம் எழுப்பவும் அனுமதி கோரிய ரிட் மனுவை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் இன்று சிறப்பு அமர்வு நடத்தியது.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஏ.பொற்கொடி, தாக்கல் செய்த ரிட் மனுவை இன்று காலையில் 10.30 மணியளவில் விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், ‘சென்னை மாநகராட்சி பரிந்துரைத்த மூன்று மாற்று இடங்களில் தற்போது உடலை அடக்கம் செய்யலாம். பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகமானது குறுகிய சாலையுடன் கூடிய குடியிருப்புப் பகுதியில் உள்ளதால், கட்சி அலுவலக வளாகத்திற்குள் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது.

கட்சி அலுவலக நிலத்தின் பரப்பளவு சுமார் 2,400 சதுர அடியில் மட்டுமே இருந்தது, அதில் ஒரு மேற்கட்டுமானம் ஏற்கனவே உள்ளது. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அரசு தரப்பில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது, 2000 சதுர அடி தர தயாராக இருக்கிறோம். இது குறித்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் கருத்தை பெற்று தெரிவியுங்கள்' என்றார்.

இந்த வழக்கில் மதியம் 2.15 மணிக்கு தீர்ப்பை வழங்கிய நீதிபதி பவானி சுப்பராயன், 'ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேயுள்ள பொத்தூரில் அடக்கம் செய்து கொள்ளலாம். போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும். அரசு மரியாதை கோரிய விண்ணப்பத்தின் மீது தமிழக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்' என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

x