சென்னை ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரயிலை இயக்கி இறுதிகட்ட சோதனை ஓட்டம்


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரயில் மத்திய பிரதேச மாநிலம் கஜூராஹோவில் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. இதுவரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பல்வேறு கட்ட ஆய்வுகள்: இதற்கிடையில், வந்தே பாரத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறுகிய தூரத்துக்கு இயக்கும் வகையில், முதல் வந்தே மெட்ரோரயில் அண்மையில் தயாரிக்கப் பட்டது. அங்குள்ள ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதையில் இந்த ரயிலை நிறுத்திபல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைடுத்து, ரயில்வே வாரியத்தின் உத்தரவின் பேரில், மத்திய பிரதேச மாநிலம் கஜூராஹோவில் ஆர்.டி.எஸ்.ஓ. எனப்படும் இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள், முதல் வந்தே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே வாரியத்தின் உத்தரவின் பேரில், மத்திய பிரதேச மாநிலம் கஜூராஹோவில் முதல் வந்தே மெட்ரோ ரயில் இறுதிகட்ட சோதனை நடத்தப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்: வந்தே மெட்ரோ ரயிலின் வேகம், சிக்னல் தொழில் நுட்பம் மற்றும் ரயில் பெட்டிகளில் உள்ள பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் ஆகியவை குறித்து ஆர்.டி.எஸ்.ஓ.அதிகாரிகள் ஆய்வு நடத்து கின்றனர். குறிப்பாக, பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்படும். இதன் பிறகு, இந்த ரயில் இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளிக்கும். இதைத்தொடர்ந்து, முதல் வந்தே மெட்ரோ ரயில் இயக்கும் வழித்தடத்தை ரயில்வே அமைச் சகம் முடிவு செய்து அறிவிக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

x