கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு


கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (எ) சிவசங்கர்(43). கேபிள் டிவி தொழில் நடத்திவருகிறார். பாமகவைச் சேர்ந்த இவர், கடலூர் நகர வன்னியர் சங்க முன்னாள் தலைவராவார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல்தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, பைக்குகளில் வந்த 4 மர்ம நபர்கள் சிவசங்கரை சரமாரியாக வெட்டினர். அருகில் உள்ளவர்கள் கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

பலத்த காயத்துடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயம் உள்ள நிலையில், அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது பாமக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதம் காரணம்: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவசங்கரின் தம்பியும், பாமக பிரமுகருமான பிரபுவை, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், தங்கபாண்டியன், வெங்கடேசன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக பிரபுவின் அண்ணன் சிவசங்கர் இருந்தார். எனவே, அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீஸார் கூறினர்.

x