முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 10 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை!


கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கரூரில் பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிபதி சண்முகசுந்தரம் அனைத்து மனுக்களையும் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், கடந்த சில வாரங்களாக தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.

கரூரைத் தொடர்ந்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டிலும் சிபிசிஐடி சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே அவருடைய ஆதரவாளர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

x