நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்ற புத்தகம் வெளியிடப்பட்ட நிலையில், மோடி மற்றும் ஹிட்லர் முகத்தை இணைத்து மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி, எதிர்க்கட்சியினர் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இந்நிலையில், மதுரை கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் போஸ்டர் ஒன்று அடிக்கப்பட்டுள்ளது. அதில், "நாடாளுமன்ற அவைகளில் ஊழல், நாடகம், திறமையற்றவர், சர்வாதிகாரி, வெட்கக்கேடு, துரோகம் செய்தார் உள்ளிட்ட வார்த்தைகளை பேச தடை!" என்றும், "எம்பிக்கள் பேச்சுரிமையை மறுக்கும் நடவடிக்கைக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், போஸ்டரில் "மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல" "மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களோ" என்று கூறி அருகில், ஹிட்லர் மற்றும் மோடியின் முகத்தை இணைத்தவாறு போஸ்டர்களை அடித்து பல்வேறு பகுதிகளில் ஒட்டி உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.