திருச்சி வனக்கோட்டத்தில் மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழப்பு!


எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எவ்வித அனுமதி இல்லாமலும் வளர்ப்பு யானை விதிகளுக்கு புறம்பாக, நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததை அடுத்து, யானை மீட்கப்பட்டு திருச்சி எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் சேர்க்கப்பட்டது. வன கால்நடை மருத்துவர்கள் குழு கீரதி யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

கடந்த ஒரு மாதமாக யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் அந்த யானை நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தலைமையில் வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் திருச்சி மண்டல நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் தலைமையிலான குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து யானை முகாம் வளாகத்தில் நேற்று அடக்கம் செய்தனர்.

x