ஆனி அமாவாசை: ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்


ஆனி அமாவாசை

ராமேசுவரம்: ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகளும் நடைபெற்றன. ஆனி அமாவசையை முன்னிட்டு அதிகாலையில் இருந்தே ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் தோஷங்கள் நீங்க பூஜைகள் செய்தனர்.

தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனிதத் தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்ததால் நகரின் பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.