ராகுல் காந்திக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியவில்லை - மத்திய அமைச்சர் எல்.முருகன் சாடல்


கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு

கோவை: காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி செல்ல வழி தெரியவில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை மாநகர மாவட்ட பாஜகவினர் சார்பில் விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “பதவியேற்பின் போது தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் தான் பதவி ஏற்றிருக்க வேண்டும். இதை கடைபிடிக்காத தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மக்களவை சபாநாயகர் குழு அமைத்து உள்ளார். இக்குழுவின் விசாரணையின்படி இதில் நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல் காந்தி ஹத்ராஸுக்கு சென்றுள்ளார். ஆனால், கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்ட கள்ளக்குறிச்சிக்கு அவர் ஏன் வரவில்லை? தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சிக்கு வந்து மக்களை சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்திக்கும், மல்லிகார்ஜுன கார்கேவிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் வழி தெரியவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் செய்து இரட்டை நிலைப்பாடு எடுக்கக் கூடாது. கள்ளக்குறிச்சிக்கு ராகுல் வரவேண்டும்” என்று அவர் கூறினார்

மேலும், “தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தலைவர்களும் பங்கேற்ற பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று மிகப்பெரிய உத்வேகத்தோடு களத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நிதி வழங்கியது குறித்து இரு தரப்பு விவாதங்கள் உள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். இதை உயர்நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழித்து, தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் காப்பாற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள போதைப் பொருட்கள் புழக்கம், டாஸ்மாக் கடை எண்ணிக்கை ஆகியவற்றை குறைக்க வேண்டும். மாறாக டாஸ்மாக் கடைகளை அதிகப்படுத்தியுள்ளனர். மாணவர்களுக்கு தேவையான யோகா, கல்வி ஆகியவற்றை கொடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக தலைவர்களின் செயல்பாடுகளால் பாஜக மிகப்பெரிய வகையில் வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எங்களது தலைவர் பதிலளித்துள்ளார். புதிய சட்டங்கள் தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தாராபுரம் தொகுதியில் நான் போட்டியிட்டபோது தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல, பழனியில் இருந்து தாராபுரம் வழியாக ஈரோடுக்கு ரயில் பாதை கொண்டு வரப்படும் என சொன்னேன். உடனடியாக அடுத்த பட்ஜெட்டில் அதனை அறிவித்துள்ளோம். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்வதற்கு, ஏற்கெனவே இருக்கும் ரயில் பாதையை இரட்டை இரயில் பாதையாக மாற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை நேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அவர்களை சந்தித்து, மக்களின் கோரிக்கையை கொடுத்துள்ளேன். உடனடியாக ஆய்வு செய்து இரட்டைப்பாதையாக அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்” என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.