கேரளா, தமிழக மக்களுக்கு பயனுள்ளவனாக இருப்பேன்: மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி உறுதி


சென்னை: மத்திய சுற்றுலா, பெட்ரோலிய துறை இணையமைச்சர் சுரேஷ்கோபி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தை நான் அதிகமாக நேசிக்கிறேன். என்னுடைய ஆரம்பகாலத்தில், சினிமாவில் வாய்ப்புதேடி வந்தபோது சென்னை எனக்கு படுத்து தூங்குவதற்கு இடம் கொடுத்தது. எனவே சென்னையையும், தமிழகத்தையும் நான் எப்போதும் நேசிக்கிறேன். தமிழகத்தின் மீது எப்போதும் எனக்கு பாசம் உள்ளது.

இப்போது கேரள மக்கள் கொடுத்த ஆசீர்வாதத்தில் நான்அமைச்சராகி உள்ளேன். நான் என்ன செய்தாலும் அது கேரள மக்களுக்கு சென்று சேர வேண்டும். நான் எம்.பி. ஆக வெற்றி பெற்றால், தமிழகம், கேரளாவுக்கு பயனுள்ளவனாக இருப்பேன் என்று கூறியிருந்தேன். தேர்தலுக்கு முன்பே நான் தமிழகத்துக்கும் எம்.பி.தான் என கூறியிருந்தேன்.

எனவே நான் இரு மாநிலங்களுக்கும் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வேன். காவிரி குறித்த நடவடிக்கைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். பெட்ரோல் விலை குறைப்பு குறித்து இப்போது சிந்தனை செய்ய முடியாது. கச்சா எண்ணெய் பற்றி அனைவரும் புரிந்து கொண்டால், விலை குறைப்பு பற்றி கேள்வி வராது. சபரிமலையை யாரும் தொட முடியாது. தொட்டவர்கள் எல்லாம் எங்கோ போய் உட்கார்ந்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்