நீட்-க்கு முன் மருத்துவ கல்வியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் விவரத்தை தர மறுப்பது ஏன்? - அண்ணாமலை கேள்வி


சென்னை: நீட் தேர்வுக்கு முன்னதாக அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் விவரத்தை தர மறுப்பது ஏன் என தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை தமிழக பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும் திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன், முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்