அரசு மருத்துவக் காப்பீடு அட்டையால் எந்தப் பயனும் இல்லை: முன்னாள் காவல் துறையினர் வேதனை


ஓய்வுபெற்ற காவல் துறையினர்

தாம்பரம்: அரசு சார்பில் வழங்கப்படும் மருத்துவக் காப்பீடு அட்டைகளால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என காவல் துறையின் ஓய்வுபெற்ற காவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவல்துறையினர் நலச்சங்க கலந்தாய்வு கூட்டம் தாம்பரத்தில் இன்று காலை நடைபெற்றது. ஓய்வுபெற்ற காவல் அலுவலர் நலச்சங்க கூட்டமைப்பின் கவுரவத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.

இந்தக் கூட்டத்தில் சங்கம் தொடங்கி 15 ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி சிறப்பு கையேடு வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய சங்க உறுப்பினர்கள், “ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெரும் அரசு ஊழியர்களிடம் மாதம் ரூ.370 பிடித்தம் செய்து, அரசு சார்பில் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த மருத்துவக் காப்பீடு அட்டைகளை பெரும்பாலான மருத்துவமனைகள் ஏற்பதில்லை. இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறன. சிகிச்சைக்காக வெளியில் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்தப் பிரச்சினைக்கு அரசு தீர்வுகாண வேண்டும்” என்றனர். இதனைத் தொடர்ந்து சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்டுவதற்கு ஆட்சியரை அணுகி இடம் கேட்கவும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

x