சென்னை | மது போதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு


சென்னை: மது போதையில் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் இறந்தார். சென்னை அசோக் நகர் 89-வது தெருவில் வசிப்பவர் காளிதாஸ் (28). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மது போதையில் தனது வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் படுத்து தூங்கினார். அப்போது லேசாக மழை பெய்ததால், காளிதாஸ் தூக்கத்திலிருந்து விழித்து வீட்டுக்கு செல்வதற்காக மொட்டை மாடியின் ஓரத்தில் நடந்து சென்றார்.

அப்போது அவர், திடீரென நிலைதடுமாறி மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த காளிதாஸை அங்கிருந்தவர்கள் மீட்டு, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த காளிதாஸ், நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.