புலையர் இனத்தை மீண்டும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம் @ திண்டுக்கல்


திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ., கே.பாலபாரதி உள்ளிட்டோர். படம்: நா.தங்கரத்தினம்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தா.ஆஜய்கோஷ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.பாலபாரதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிறுமலை, கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பளியர் பழங்குடியின மக்களுக்கு வன உரிமைச்சட்டப்படி வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும்.

காட்டு நாயக்கன் இனச்சான்று அட்டை மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். புலையர் இனத்தை மீண்டும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும். என்.புதுப்பட்டியில் மலைவாழ் மக்களுக்கு உண்டி உறைவிடப் பள்ளி துவங்கப் படவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பி.செல்வராஜ், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமசாமி, மாவட்டத் தலைவர் என்.பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.