இறந்தவர் பெயருக்கே மீண்டும் பட்டா மாறுதல் உத்தரவு: வாரிசுதாரர்கள் அதிர்ச்சி @ விளாத்திகுளம்


கோவில்பட்டி: விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் பெயரில் பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதால் வாரிசுதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் குறுவட்டம் வெளவால் தொத்தி வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு அன்னலட்சுமி, சரஸ்வதி, கோப்பம்மாள் ஆகிய 3 மகள்கள் உள்ளனர். ராஜகோபால் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். வௌவால் தொத்தி கிராமத்தில் வசித்து வந்த அழகம்மாள் வயது மூப்பு காரணமாக கடந்த 05.06.2021-ல் இறந்தார். அழகம்மாள் பெயரில் வெளவால் தொத்தி கிராமத்தில் சுமார் 1.82 ஏக்கர் நிலம் உள்ளது.

அந்நிலத்தை பட்டா மாறுதல் செய்ய அழகம்மாளின் மூத்த மகளான அன்னலட்சுமி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபத்தியின் போது, கடந்த மாதம் 18-ம் தேதி வாரிசுப்படி பட்டா மாறுதல் செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். இந்நிலையில், நேற்று (1-ம் தேதி) விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அன்னலட்சுமியிடம் பட்டா மாறுதல் செய்து புதிய பட்டா வழங்கப்பட்டது. புதிய பட்டாவுக்குரிய எண் 1557, 1558 ஆகும்.

பட்டாவை வாங்கிப் பார்த்த அன்னலட்சுமி அதிர்ச்சியடைந்தார். அதில், புதிய பட்டாவும் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த தனது தாய் அழகம்மாளின் பெயரிலேயே இருந்தது. இதனால் பட்டா மாறுதல் பெற அன்னலட்சுமி மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறுகையில், "விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக விவசாயி அன்னலட்சுமி விண்ணப்பம் செய்திருந்தார். அதில், தனது தாய் அழகம்மாள் பெயரில் உள்ள 1.82 ஏக்கர் நிலத்தை, அவரது வாரிசுகளான தங்களது பெயர்களில் பட்டா மாற்றும் செய்து தரும்படி வேண்டியிருந்தார்.

அழகம்மாள் பெயரில் இருந்த பட்டா எண் 24 ஆகும். அதனை 2-ஆக பிரித்து 1557, 1558 என வழங்கப்பட்டுள்ளது. இதில், பட்டா மாறுதல் உத்தரவில் பட்டா மாறுதலுக்கு முன் மற்றும் பட்டா மாறுதலுக்கு பின் ஆகியவற்றில் அழகம்மாள் பெயரே உள்ளது. அதாவது இறந்தவர் பெயருக்கே மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

இது விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. இது மிகவும் வேதனைக்குரியதாகும். இதை நாங்கள் விவசாயிகளை அவமதிக்கும் செயலாகவே பார்க்கிறோம். இது போன்று தவறுதலாக பட்டா மாறுதல் செய்துள்ள அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.