திருமணத்திற்கு வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி: ஸ்கூட்டியை பரிசாக அளித்த மணமக்கள்!


பரிசை பெற்ற ஹக்கிம்

திருமணத்திற்கு வந்தவருக்கு 70 ஆயிரம் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் மணமக்கள்.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வாசுதேவன் - ஜோதி பிரியா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

இருவீட்டாரின் சார்பிலும் திருமணத்திற்கு வருகை தந்த உறவினர் ஒருவருக்கு குலுக்கல் முறையில் 70 ஆயிரம் மதிப்புள்ள இரு சக்கர வாகனம் 'ஸ்கூட்டி பெப்' வழங்கப்படும் என இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் தெரிவித்திருந்தனர்.

பரிசாக வழங்கப்பட்ட ஸ்கூட்டி பெப்

இதன் பேரில், திருமணத்திற்கு வருகை தந்த அனைவரும் தங்களது பெயர்களை எழுதிக் கொடுத்தனர். பின்பு மணமக்கள் முன்னிலையில், பெயர்கள் குலுக்கப்பட்டன. அதன்படி திருமணத்திற்கு வந்த கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஹக்கிம் என்பவருக்கு வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

இது குறித்து மனமக்கள் வீட்டார் கூறுகையில், "எங்கள் வீட்டு திருமணம் அனைவருக்கும் மறக்கமுடியாத நிகழ்வாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனடிப்படையில், திருமணத்திற்கு வரும் ஒரு நபருக்கு குலுக்கள் முறையில் இரு சக்கர வாகனம் ஒன்றை பரிசாக வழங்கலாம் என்று முடிவு செய்து இருவீட்டாரும் இணைந்து தற்போது வழங்கி உள்ளோம்" என்றனர்.

x