சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் மாதத்தில் மட்டும் 84 லட்சம் பேர் பயணம்


சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 84 லட்சத்து 33 ஆயிரத்து 837 பேர்பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பான, விரைவான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளிக்கிறது. இதன் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.

தினமும் 3 லட்சம் பேர்: இந்த ரயில்களில் நாள்தோறும் 2.60 லட்சம் பேர் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 84 லட்சத்து 33 ஆயிரத்து 837 பேர் பயணம் செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டுஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 12,727 பேர் அதிகமாகும்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக, ஜூன் 21-ம் தேதி 3 லட்சத்து 27 ஆயிரத்து 110 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் க்யூஆர்குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37 லட்சத்து 5 ஆயிரத்து 316 பேரும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 31லட்சத்து 33 ஆயிரத்து 11 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 30,752 பேரும், குழு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 3,757 பேரும், சிங்காரச் சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 15,61,001 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை, வாட்ஸ்-அப் டிக்கெட் உள்ளிட்ட பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.