தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் திருப்பம்; அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதியலாம் என நீதிபதிகள் கருத்து


சென்னை: தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டுமெனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக, தேசியமனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் முடித்து வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றிதிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், துப்பாக்கிச் சூடு சம்பவம்தொடர்பாக 13 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், நான்அளித்துள்ள புகாரின் அடிப்படையில் முடித்து வைக்கப்பட்ட இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி டிஎஸ்பி லிங்க திருமாறன் தரப்பில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என வாதிடப்பட்டது.

அதையேற்க மறுத்த மனுதாரரான ஹென்றி திபேன், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்ற காவல்துறை அதிகாரியை மட்டும் வழக்கில் சேர்த்துள்ளது. துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.

ஆனால் அந்த அறிக்கை மீது தமிழக அரசு இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை என வாதிட்டார்.

சிபிஐ தரப்பில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுரையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வரும் சூழலில், இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை, என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் நடத்திய அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக அநீதிஇழைக்கப்பட்டுள்ளது. 13 பேர்அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நடந்த இந்த துயர சம்பவத்துக்காக எந்தவொரு அதிகாரியும் இதுவரை வருந்தியதாக தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தும்படி உத்தரவிட்டது யார், இத்தனை உயிர்கள் பறிபோனதற்குபொறுப்பேற்றுக் கொள்ளப்போவது யார் என்றும் கேள்வி எழுப்பினர்.

பின்னர் எதிர்மனுதாரர்களின் ஆட்சேபத்துக்கு பதிலளிக்கும்படி மனுதாரரான ஹென்றி திபேனுக்கு உத்ததரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 15-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்ற நீதிபதிகளின் இந்த கருத்து காரணமாக இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுதமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது