புதிய 3 சட்டங்களை வரவேற்று புதுச்சேரி காவல் நிலையங்களில் தோரணம்; வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு


புதுச்சேரி: மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வரவேற்று புதுச்சேரி காவல் நிலையங்களில் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. அதேநேரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று நடைமுறைக்கு வந்து உள்ளன. புதிய நடைமுறை சட்டம் புதுவையில் இன்று முதல் அமுலுக்கு வந்தது. இதையொட்டி காவல் நிலையங்களில் வாழை மரம், தோரணங்கள் மற்றும் பலூன் கட்டி போலீஸார் வரவேற்றனர். மேலும் புதிய சட்டம் நடைமுறை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். டிஜிபி, ஐஜி, டிஐஜி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்கள் அனைத்திலும் வாழை மரம், தோரணங்கள் மற்றும் பலூன் கட்டப்பட்டிருந்தது.

நீதிமன்ற புறக்கணிப்பு: அதே நேரத்தில் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். புதிய சட்டங்களால் பல்வேறு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, புதுவை வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.

புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்து, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.16 நீதிமன்றங்களை சேர்ந்த, ஆயிரத்து 200 வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பால், நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.