50 ஆண்டுகளாக பழநி மலையடிவாரத்தில் வசித்தோரின் 140 வீடுகள் இடித்து அகற்றம் - ஆக்கிரமிப்பால் நடவடிக்கை


திண்டுக்கல்: உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, பழநி மலையடிவாரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 3 கி.மீ. தூரம் கிரிவலப்பாதை உள்ளது. இப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழநி மலையடிவாரத்தில் அண்ணா செட்டிமடம் என்று அழைக்கப்படும் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்தனர். ஆக்கிரமிப்பாளர்களை அந்த இடத்தில் இருந்து காலி செய்யுமாறு வருவாய்த் துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அவர்கள் மாற்று இடம் வழங்கக் கோரி இடத்தை காலி செய்யாமல் இருந்தனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான ஏற்படுகள் நடைபெற்றது. இந்நிலையில் ஜூலை 2-க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தவறினால் திண்டுக்கல் ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் ஜூலை 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த ஜூன் 28-ம் தேதி ஆக்கிரமிப்பாளர்கள் 139 பேருக்கு பழநி அருகேயுள்ள வடக்கு தாதநாயக்கன்பட்டியில் ஒவ்வொருவருக்கும் தலா ஒன்றரை சென்ட் நிலத்துக்கான வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

மேலும், ஆக்கிரமிப்பாளர்களை உடனே அந்த இடத்தில் இருந்து காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளர்கள் பழநி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது, 2 சென்ட் இடம் தருவதாக கூறிவிட்டு, தற்போது ஒன்றரை சென்ட் நிலம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை உடனடியாக காலி செய்ய வலியுறுத்துவதை ஏற்க முடியாது.

குறைந்தது 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, வட்டாட்சியர் சக்திவேலன், ஆக்கிரமிப்பாளர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இடத்தை காலி செய்ய வேண்டும். மேலும், 2 சென்ட் இடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஆக்கிரமிப்பாளர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, கடந்த 2 நாட்களாக ஆக்கிரமிப்பாளர்கள் குடியிருப்புகளை காலி செய்து வந்தனர்.

அதனை தொடர்ந்து, இன்று (ஜூலை 1) காலை 7 மணி முதல் ஆக்கிரமித்து கட்டியிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள் 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, கோட்டாட்சியர் சரவணன், வட்டாட்சியர் சக்திவேலன், டிஎஸ்பி தனஞ்ஜெயன் ஆகியோர் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.