சோமங்கலத்தில் கொசுப் புழுக்களை அழிப்பதற்காக நீர்நிலைகளில் விடப்பட்ட கம்பூசியா மீன்கள்


சோமங்கலத்தில் கிணற்றில் சுகாதாரத் துறையினர் கம்பூசியா மீன்களை விட்டனர்.

சோமங்கலம்: ஒவ்வோர் ஆண்டும் இந்திய அளவில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் ஜூன் மாதம் முழுவதும் காஞ்சி மாவட்டம், சோமங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கொசுப் புழுக்களை உண்ணும் ‘கம்பூசியா’ வகை மீன்களை வளர்த்து கிணறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் அந்த மீன்கள் விடப்பட்டன.

தொடர்ந்து விழிப்புணர்வு கோலப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. மேலும் மலேரியா விழிப்புணர்வு கூட்டமும், தொடர்ந்து உறுதிமொழியும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் மு.கன்னியப்பன், சுரேஷ், பிரகாஷ் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கம்பூசியா வகை மீன்கள், கொசுப்புழுக்களை உண்பதால், கொசுப்புழு உற்பத்தி தடுக்கப்படுவதுடன், நீர்நிலைகளில் உள்ள கொசுக்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. தங்கள் பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கையாகக் கிணறுகளில் கம்பூசியா மீன்களை விட விரும்புவோர் சுகாதாரத் துறையை அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.