பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு: புதுச்சேரி, சென்னை, காரைக்காலில் நடந்தது


புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு புதுச்சேரி, சென்னை, காரைக்கால் உட்பட 4 இடங்களில் இன்று நடந்தது. வாக்குப்பதிவு ஆன்லைனிலும் நடந்ததால் பதிவான சதவீதம் நாளை தெரியவரும். அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு வரும் 7ம் தேதி நடக்கிறது.

பிரான்ஸ் உள்பட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9ம் தேதி நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்கால், சென்னை, கேரளப் பகுதிகளிலும் அதற்கான வாக்குப்பதிவு பிரான்ஸ் நாட்டுத் தூதரகம் சார்பில் நடத்தப்பட்டது. அதன்படி பிரான்ஸில் ஜோர்டான்பார்டிலா கட்சியானது 31.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதையடுத்து அக்கட்சிக்கு 30 உறுப்பினர்கள் தேர்வாகினர். அக்கட்சிக்கு அடுத்ததாக பிரான்ஸின் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்சியானது 13.83 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அக்கட்சிக்கு 13 உறுப்பினர்கள் தேர்வாகினர்.

இமானுவேல் மேக்ரான் கட்சியின் உறுப்பினர் குறைவாக தேர்வான நிலையில் பிரான்ஸ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

பிரான்ஸுக்கு வெளியே வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய தாங்கள் குடியிருக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் உள்ள 4550 பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் வாக்குப்பெட்டியில் வாக்களிக்கவோ, இணையம் மூலம் வாக்களிக்கவும் அழைக்கப்பட்டனர்.

இதற்காக புதுச்சேரியில் பிரான்ஸ் துணை தூதரகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட இரு இடங்களிலும், சென்னை, காரைக்காலில் தலா ஒரு இடங்களிலும் வாக்குப்பெட்டியில் வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

இந்த ஆண்டு முதல் சுற்றில் 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் தங்களது அடையாள அட்டையைக் காட்டி வாக்குகளைச் செலுத்தினர்.

புதுச்சேரியில் பிரான்ஸ் துணைத் தூதரக துணைத் தூதர் லிஸ்டல்போட் தனது வாக்கை செலுத்தித் வாக்குப் பதிவைத் தொடங்கிவைத்தார். மாலை வரை வாக்குப்பதிவு நடந்தது.

ஆனாலும் இணையத்திலும் வாக்குப்பதிவு நடந்ததால் வாக்குப்பதிவு விவரம் நாளைதான் தெரியவரும் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் ஜூலை 7 ஆம் தேதி இரண்டாம் சுற்று வாக்குப்பதிவும் நடைபெறும் என கூறப்பட்டது.