மதுரையில் சிக்கன் சாப்பிட்ட பொறியாளர் உயிரிழப்பு: போலீஸார் விசாரணை


மதுரை: கோசாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (37). பிடெக். ஐ.டி. பொறியியல் பட்டதாரியான இவர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி, சௌமியா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 26-ம் தேதி ஆனந்த்ராஜ், அருகிலுள்ள கடை ஒன்றில் சமைத்த சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளார். எஞ்சிய சிக்கனை மறுநாள் காலையில் சூடுபடுத்தி சாப்பிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

பின்னர் அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவருக்கு, 29-ம் தேதி மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கூடல்புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.