டாஸ்மாக் கடைகளை மூட்டினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்: திருமாவளவன் யோசனை


மதுரை: டாஸ்மாக் கடைகளை மூடினால் நல்ல பெயர் கிடைக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.,யுமான தொல். திருமாவளவன் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு கிராமத்தில் 1997 கொலையுண்ட முருகேசன் உள்ளிட்ட போராளிகளுக்கான நினைவு தினம் இன்று நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பங்கேற்று, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது: "செப்டம்பர் 17-ல் பெரியார் பிறந்த நாளன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மகளிர் மாநாடு நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என, மேலவளவில் உயிரிழந்தவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி போதிய இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளச்சாராயம், நச்சு சாராய சாவு இந்தியா முழுமையும் உள்ளது. இதற்கு தீர்வாக பூரண மது விலக்கு வேண்டும்.

டாஸ்மாக் கடைகளாலும் பாதிப்புள்ளது. தேசிய அளவில் மது விலக்கு கொள்கை அமல்படுத்த வேண்டும். மெத்தனால் மாபியா கும்பலை கண்டு பிடித்து, அவர்களை தண்டிக்க வேண்டும். மது விலக்கு சட்ட மசோதா நல்லது. இருப்பினும், பூரண மது விலக்கே தீர்வு. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறானது. பாஜக பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு. கடந்த தேர்தலில் ஜெயித்ததை விட 63 இடங்கள் குறைவு. அயோத்தி கோவில் பகுதியிலுள்ள பைசாபாத் தொகுதியிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். நடிகர் விஜய் மாணவர்களிடம் பேசியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என அவர் கூறியது மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்று கூறியதாகவே நான் கருதுகிறேன். தமிழக அரசு முதலில் படிபடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள்ளக்குறிச்சி விஷசாராய மரணத்தை நேரில் சென்று பார்த்த போது, அங்குள்ள மக்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றே கூறினர்.

தமிழக முதல்வரும் டாஸ்மாக் கடையை மூடினால் மக்ககளிடம் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும். தென் மாவட்டங்களில் நடக்கும் ஆணவ கொலைகளைத் தடுக்க வேண்டும். இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காவல் துறையில் தனி உளவு பிரிவு தொடங்க வேண்டும். பூரண மது விலக்கை ஆதரித்து விசிக சார்பில், பெரியார் பிறந்த நாளில் விசிக சார்பில், மிகப் பெரிய மகளிர் மாநாடு ஒன்றை நடத்தும். கள் விற்பனை, டாஸ்மாக் மது உள்பட எந்த வகை மதுவும் வேண்டாம். பூரண மது விலக்கு என்பதே தீர்வு. இதற்கு நடவடிக்கை தேவை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.