வாழை, கரும்பு, வெற்றிலை சாகுபடியை விமர்சித்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருச்சியில் பேரணி


திருச்சி நீர்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள்.

திருச்சி: நெல் தவிர வேறு பயிர்களான வாழை, கரும்பு, வெற்றிலை சாகுபடி செய்தால் நிலத்திற்கு கேடு விளையும் என தெரிவித்த திருச்சி வருவாய்த் துறை நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட அலுவலகம் நோக்கி இன்று பேரணி நடத்தினர்.

பேரணியின்போது, ''துறையூர், முசிறி பகுதிகளில் பாயும் அய்யாறு துணை வாய்க்கால்களை ஆக்கிரமித்து அழிப்பதை சீர் செய்ய வேண்டும். வேளாண் விஞ்ஞானிகளும், வேளாண் அறிஞர்களும் விவசாயிகள் வயலில் ஒரே பயிரை சாகுபடி செய்தால் நிலத்தின் தன்மை மாறி பயிர்கள் நன்றாக வளராமல் குறைந்த அளவே விளைச்சல் கிடைக்கும் எனச் சொல்லி வரும் நிலையில், நெல்லை தவிர வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்தால் நிலத்திற்கு கேடு விளையும் என தெரிவித்த திருச்சி வருவாய்த்துறை நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யவேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகளை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட விவசாயிகள்.

பேரணிக்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாகி மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இவர்கள் திருச்சி மாவட்ட நீர்வள ஆதார அலுவலகத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு, திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்து அங்கே கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.