எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலை ஆக.30-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலை வரும் ஆக.30-ம் தேதிக்குள் சுமுகமான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் தொடர்ச்சியாக 2 முறை நிர்வாகிகளாக பொறுப்பு வகித்தவர்கள் 2-வது முறையாக போட்டியிடக் கூடாது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடந்த 2019-ம்ஆண்டு நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஏற்கெனவே எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருமுறை தலைவராக பதவி வகித்த எஸ்.சந்தன்பாபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.கே.சந்திரசேகர், எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

நீதித் துறையின் ஓர் அங்கம்: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘வழக்கறிஞர்கள் சங்கம் என்பதும் நீதித் துறையின் ஒரு அங்கம் தான். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான தேர்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் சுமுகமாக நடத்தி, அவற்றை கண்காணிக்கும் பொறுப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உள்ளது.

அதேபோல நீதித்துறையின் மாண்பு மற்றும் வழக்கறிஞர்களின் தொழில் கண்ணியத்தை காக்க வேண்டிய கடமையும் பார் கவுன்சிலுக்கு உள்ளது. ஒழுங்கீனத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பார் கவுன்சில், ஜனநாயக ரீதியில் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கான தேர்தலையும் அமைதியான முறையில் நடத்த வேண்டும். பதவிக்காலம் முடிந்த பின்னரும்சங்க நிர்வாகிகள் பதவியில் நீடிப்பதைஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

போலீஸ் பாதுகாப்பு: எனவே கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ள எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான தேர்தலை, அந்த சங்கத்துக்கான அடிப்படை விதிகளைப்பின்பற்றி பார் கவுன்சில் வரும் ஆக.30-ம் தேதிக்குள் சுமுகமாக நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தேர்தலுக்கு தேவையான பிற அலுவலர்களையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலே நியமித்துக் கொள்ளலாம்.

இந்த தேர்தலுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் நடந்தது தொடர்பான அறிக்கையை பார் கவுன்சில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.