ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் | சாத்தியமில்லாத அறிவிப்பை முதல்வர் வெளியிடுகிறார்: அண்ணாமலை விமர்சனம்


சென்னை: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சாத்தியமில்லாத அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர்அறிவித்திருக்கிறார். கடந்த 2022-ம்ஆண்டு ஏப்.4-ம் தேதி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், ஓசூர் விமான நிலையம் குறித்து கேட்ட கேள்விக்கு அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

இந்திய அரசு மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு 150 கி.மீ சுற்றளவில் புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது.

ஓசூரில் அமைந்துள்ள விமானநிலையம் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமான நிலையம்என்பதால், மத்திய அரசின் உடான்திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது. ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம்மேம்படுத்த ஆகும் செலவு ரூ.30 கோடி. தமிழக அரசு அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்று தெளிவாகக் கூறியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போதுமீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக் கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஏற்கெனவே கடந்த 2022-ம்ஆண்டு 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை 2 ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன. 2 ஆண்டுகளில், பேருந்துகளைக்கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்க இருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை.

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், 3 ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர், நிறைவேற்ற சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x