"தமிழக ஆளுநர் பேசியது அவரின் உளவுத்துறை அறிவில் பேசியுள்ளார். அவர், 35 ஆண்டுகால உளவுத்துறை அனுபவம் மிக்கவர். இதனை அரசியல் ஆக்கக் கூடாது. உண்மை என்னவோ அதை ஆளுநர் கூறியுள்ளார்" பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பெங்களூரு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் நேரடியாக திமுகவுக்கு வாக்களித்தனர். பாஜக ஆரம்பத்திலேயே இது நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று கூறியது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் மக்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளன என்று பாஜக சொல்லியதை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் சொன்னதை தான் தற்போது நிதியமைச்சரும் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதி, மற்றொரு பொய் என்று சட்டப்பேரவையில் ஒத்துக்கொண்டுள்ளனர்.
பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா தடை செய்ய வேண்டிய இயக்கம் என ஆளுநர் மட்டுமல்ல பலதுறை வல்லுநர்களும் கூறியுள்ளனர். குறிப்பாக கேரளாவில் பாலக்காடு, ஆலப்புழா என கடந்த 2 ஆண்டுகளில் நடந்த 66 கொலைகள் சமீபத்தில் நடந்த 2 முக்கிய கொலைகள் போன்றவற்றில் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா சம்பந்தப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பேசியது அவரின் உளவுத்துறை அறிவில் பேசியுள்ளார். அவர், 35 ஆண்டுகால உளவுத்துறை அனுபவம் மிக்கவர். இதனை அரசியல் ஆக்கக் கூடாது. உண்மை என்னவோ அதை ஆளுநர் கூறியுள்ளார்.
கோல் இந்தியாவில் 2.2 கோடி டன் நிலக்கரி உள்ளது. தமிழகத்திற்கு நிலக்கரி கூடுதல் தேவை இருப்பதாகவும் எங்களால் பற்றாக்குறையை அதை சமாளிக்க முடியவில்லை என்றும் திமுகவினர் கூறுகின்றனர். மாநில அரசு தங்கள் லோடை குறைவாக மதிப்பிட்டு, அனல்மின் நிலையங்களை போதிய அளவில் பராமரிக்காததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை மறைத்துவிட்டு கோல் இந்தியா நிலக்கரி மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தூத்துக்குடி அனல்மின் நிலைய பராமரிப்பில் தவறு செய்துள்ளனர். கோல் இந்தியாவை பொறுத்தவரைக் குறைவின்றி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின் வாரியத்தில் (TANGEDCO) நஷ்டம் எனக்கூறிவிட்டு அதே துறை சார்ந்த விழாவை 3.5 கோடி செலவில் நடத்தி உள்ளனர். இதுபோன்று செய்தால் மக்களுக்கு எப்படி மின்சாரம் கிடைக்கும். எனவே, கோல் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை எனச்சொல்வது மற்றுமொரு பொய். தமிழகத்திற்கு தற்போது யூபிஎஸ் தேவை, இனி ஜெனரெட்டேர் தேவை. வரும் காலத்தில் வீட்டிலேயே நாம் மின்சாரத்தைத் தயார் செய்யும் நிலை ஏற்பாடும். ஓராண்டு கால ஆட்சியை சாதனையாகத் தமிழக அரசு பேசிக் கொண்டுள்ளது. திமுக சாதனை செய்யவில்லை, மக்களுக்கு சோதனை செய்துள்ளது" என்றார்.