வேளச்சேரியில் திமுக கூட்டம்: நாற்காலிகளை வீட்டுக்கு எடுத்து சென்ற பொதுமக்கள்


சென்னை: சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள், அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் திமுக சென்னை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ‘கருத்தரங்கம்’ வேளச்சேரியில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை தலைக்கு மேல் பிடித்தபடி நின்று கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் நாற்காலிகளுடன் தங்கள் வீடுகளை நோக்கி செல்ல தொடங்கினர். அவர்களை பார்த்து மற்றவர்களும் ஒருவர்பின் ஒருவராக நாற்காலிகளை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.