செந்தில் பாலாஜி மீதான வழக்கு; அமர்வு நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராகசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இந்த வழக்குவிசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்துக்கு காலவரம்பு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மறுநாள், விசாரணை நீதிமன்றங்களுக்கு அதுபோல எந்த காலவரம்பும் நிர்ணயிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, உச்ச நீதிமன்றஉத்தரவை தானும் மதிப்பதாககருத்து தெரிவித்த நீதிபதிஜி.ஜெயச்சந்திரன், விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு முறையும் புதிது, புதிதாக மனுக்களை தாக்கல் செய்யாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.உச்ச நீதிமன்ற உத்தரவை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, என செந்தில்பாலாஜி தரப்பை அறிவுறுத்தினார்.

பின்னர் நீதிபதி, இந்த வழக்கை விசாரித்து முடிக்க தனக்கு 4மாதம் அவகாசம் வழங்க வேண்டுமென முதன்மை அமர்வு நீதிபதிஎஸ்.அல்லி அவகாசம் கோரியுள்ளார். அதற்குள் இந்த வழக்கைவிசாரித்து முடிக்கும் திறமை அவருக்கு உள்ளது எனத் தெரிவித்து, இந்த வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 4 மாத கால அவகாசம் வழங்கினார். அத்துடன் இந்த அவகாசத்துக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

x