பொள்ளாச்சியில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்கள் அழிப்பு


பொள்ளாச்சியில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய ஆய்வில் பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிக்கப்பட்டது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரப் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று மேற்கொண்ட திடீர் ஆய்வில் பழக்கடைகளில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

பொள்ளாச்சி மார்க்கெட் பழக்கடைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மா, பலா, வாழை, அண்ணாசி, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, சப்போட்டா உள்பட பலவகையான பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி மார்க்கெட்டில் மாம்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை ரசாயனம் (எத்திலீன்) மூலம் பழுக்கவைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ் செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் வேலுசாமி, சுப்புராஜ் ஆகியோர் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டனர். பழக்கடைகள் மற்றும் மொத்த விற்பனை கடைகளில் நடத்திய ஆய்வில், ஒரு பழக்கடையில், சிறிய ரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

இதையடுத்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 250 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து, நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள இயற்கை உரம் தயாரிப்பு குழியில் கொட்டி அழிக்கபட்டது. ரசாயனம் மூலம் பழுக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் கூறும்போது, "கார்பைட் கல், எத்திலீன் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்புள்ளது.

உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிழக்க வாய்ப்புள்ளது. எனவே இது போன்று சட்ட விரோதமாக ரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் மேலும் இப்பகுதியில் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். மேலும் உணவு தரம், பாதுகாப்பு குறைபாடுகளை பொதுமக்கள் கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ் - அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். என அதிகாரிகள் கூறினர்.