நிலக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு


நாகராஜ்

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தென்னந்தோப்புக்குள் நடந்து சென்ற விவசாயி ஒருவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நாகராஜ்(52). இவர், நிலக்கோட்டை அருகே சொக்குப்பிள்ளைபட்டியில் உள்ள தனது உறவினர் தென்னந்தோப்பிற்கு இன்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு தென்னந்தோப்பிற்குள் நாகராஜ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தென்னைமட்டை மரத்தில் இருந்து தோப்பிற்குள் சென்ற மின் கம்பி மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து நாகராஜ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.