திருநெல்வேலியில் கனமழை: மணிமுத்தாறு அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை 


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் கனமழை கொட்டுவதால் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 9 சென்டி மீட்டரும், ஊத்து பகுதியில் 8.8 சென்டிமீட்டர் மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகி உள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 36 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மாஞ்சோலையில் 42 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 80 மில்லி மீட்டரும் நாலுமுக்கில் 92 மில்லி மீட்டரும் ஊத்து பகுதியில் 88 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சமவெளி பகுதிகளில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதிகளில் 23 மில்லி மீட்டரும் மணிமுத்தாறு மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளில் முறையே 7 மற்றும் 6 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணைக்கு மணிக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது மணிமுத்தாறு அணைக்கு 680 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அருவி பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.