5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூன் 23-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குடிதாங்கி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 7 செ.மீ. நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூரில் 6 செ.மீ. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தையில் 5 செ.மீ. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் 4 செ.மீ. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, கடலூர், விழுப்புரம் மாவட்டம் முகையூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகிஉள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், வரும்25, 26-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 27 முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, இன்றும், நாளையும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் 27-ம்தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே,இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது