அடுத்த ஆண்டில் 5ஜி சேவை: பிஎஸ்என்எல் அதிகாரி தகவல்


சென்னை: பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளர் பி.வெங்க டேஸ்வரலு சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘மேக்கின் இந்தியா’ திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நிகராக அனைத்து திட்டங்களும் செயல்படுத்த உள்ளன. இன்னும் ஆறு மாத காலத்துக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 4 ஜி சேவை வழங்க உள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு மத்தியில் 5 ஜி சேவை வழங்கப்படும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தங்களின் சொத்துகளை நேரடியாக விற்பனை செய்யும் முடிவை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ரூ.60 கோடி மதிப்பிலான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள சூலூர், மேட்டுப் பாளையம், உடுமலைப் பேட்டை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சொத்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.mstcecommerce.com/auctionhome/propertysale/index.jsp என்ற இணையதளம் மூலம் வரும் ஜுலை 1 பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், https://assetmoneti zation.bsnl.co.in, https://tamilnadu.bsnl.co.in/RentSpace_tn.html என்ற இணையதளங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகள் குறித்து ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். 94861 00871, 9437345839 ஆகிய மொபைல் எண்களில்தொடர்பு கொண்டும் அறியலாம். இந்த விற்பனை மூலம் கிடைக்கக் கூடிய வருவாய் கொண்டு, வரும் காலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது,முதன்மை சிவில் பொறியாளர் சசி காந்த், மூத்த பொதுமேலாளர்கள் கே.கீதாஞ்சலி, எஸ்.பி.சிங்நிம்ரமா, முதன்மை பொதுமேலாளர்கள் எம்.முரளி கிருஷ்ணா, பி.சுதாகர் ராவ் உடனிருந்தனர்.