ஓராண்டுக்குப் பின்னர் திறக்கப்பட்ட தொட்டபெட்டா: உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்


தொட்டபெட்டா சிகரம் ஓராண்டுக்குப் பின்னர் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு இன்று (மார்ச் 27) திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிகரத்தைக் கண்டுகளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் பெய்த தொடர் மழை காரணமாக உதகை - கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்குச் செல்லும் சாலை பெயர்ந்து விழுந்தது. அதன் அடிப்பகுதியில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய் சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலை பழுதடைந்ததால் தொட்டபெட்டா மலைச்சிகர சுற்றுலா தலம் மூடப்பட்டிருந்தது.

இதையடுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் தொட்டபெட்டா சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, தொட்டபெட்டா ஊராட்சியில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அமைக்கப்பட்ட தொட்டபெட்டா சாலை சிறுபாலத்தை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று திறந்துவைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குகின்ற காரணத்தினால், ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா ஆகிய சுற்றுலா தலங்களைக் கண்டுகளிக்க அதிக அளவில் வருகை புரிகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டாவும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். இங்கு கடந்த ஜூன் மாதம் 2021-ம் ஆண்டு பெய்த கனமழையினால் தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலையில் உள்ள கல்வெட்டில் அதிகளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் கல்வெட்டு சேதமடைந்து, வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.

இதைச் சீர்செய்யும் வகையில், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டத்தின் கீழ் தொட்டபெட்டா சாலை சிறுபாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை மேற்கொள்ளும்போது கல்வெட்டுக்குப் பாதுகாப்பாகத் தடுப்புச்சுவரும் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, தடுப்புச்சுவருடன் கூடிய தொட்டபெட்டா சாலை சிறுபாலம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் இச்சிறுபாலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொட்டபெட்டா சிகரம் ஓராண்டுக்கு பின்னர் திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்ட சிகரத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தொட்டபெட்டா சிகரத்திலிருந்து தொலைநோக்கி மூலம் உதகை, மைசூரு, பவானிசாகர் ஆகியவற்றைக் கண்டு ரசித்தனர்.

சிகரத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உணவகம் கோடை சீசனுக்கு முன்னர் திறக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் உதயகுமார் தெரிவித்தார்.

x