தள்ளுபடியான ஜாமீன் மனுக்களை நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்: வழக்கறிஞர் சங்கம் முறையீடு


சென்னை: ஏற்கெனவே தள்ளுபடியான ஜாமீன்மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விடுமுறை கால அமர்வில் மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1 முதல் வரும் ஜூன் 2வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரும் மனுக்கள் அவசர வழக்காக விசாரிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் விடுமுறை கால அமர்வில் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்கும்படி உயர் நீதிமன்ற பதிவுத் துறையை வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்எச்ஏஏ) தலைவரான ஜி. மோகனகிருஷ்ணன் நேற்று விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி ஆர். சக்திவேல் முன்பாக ஆஜராகி ஒரு முறையீடு செய்தார்.

அப்போது அவர் முறையிட்ட தாவது: ஜாமீன் கிடைக்காமல் பலர் மாதக்கணக்கில் சிறையில் இருந்து வருவதால் ஏற்கெனவே தள்ளுபடியான ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விடுமுறை காலசிறப்பு அமர்வில் மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.

அதேபோல முன்ஜாமீன் மனுக்களையும் அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

x