மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 15 செமீ, , நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 11 செமீ, திருப்பத்தூரில் 9 செமீ,நீலகிரி மாவட்டம் கூடலூர், சென்னை சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 22, 23, 24 தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 24-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

x